சில்லுன்னு ஒரு காதல்

ஜோதிகாவும் சூர்யாவும் இனி வாழப் போகும் வாழ்க்கைக்கு ஒத்திகை பார்ப்பதற்காக இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது, ஜில்லுன்னு ஆசையாக குந்தவியாக நடிக்கும் ஜோதிகாவை கூப்பிடும் சூர்யா, கணவன் குறிப்பறிந்து காதலாகி கசிந்து உருகும் ஜோதிகா.

அம்பையில் தப்பித் தவறி ஒரு பையன் சைட் கூட அடிக்க முடிக்க முடியாதச் சூழலைக் கண்டு வெறுத்து குந்தவியும் அவள் தோழிகளும் அட்லீஸ்ட் கல்யாணமாவது காதல் கல்யாணமாகப் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுகிறார்கள். இரண்டு தோழிகளும் லோக்கலாக கிடைக்கும் இரண்டு மீசைக்காரர்கள் மேல் ஆசைப்பட்டுக் காதல் கல்யாணம் செய்து கொண்டு விட குந்தவிக்கு மட்டும் பெரியோர்கள் நிச்சயித்த மாப்பிள்ளையோடு திருமணம்.
காதலித்துத்தான் கல்யாணம் என்ற லட்சியம் கலைந்த சோகம், முன் பின் தெரியாதவனொடு எப்படி வாழப் போகிறொம் என்ற கடுப்பு குந்தவிக்கு! தாலி கட்டியவுடன் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டக் காதலி/மனைவி நினைவோடு கௌதம்.

இருவரும் தாம்பத்தியத்தில் இணைகிறார்கள். உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் போல் பழையக் கனவுகளையெல்லாம் மறந்து அந்நியோன்னமாய் வாழ்ந்து அதற்கு அடையாளமாக லட்டு மாதிரி ஒரு குட்டிப் பெண் ஐஸ்வர்யா! இது பழைய காதலியின் பெயர்! நிஜமாகவே சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் ஒரு குட்டிப் பெண் பிறந்தால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல வைக்கும் துருதுரு பெண்! தொடரும் ஊடல்கள்! கூடல்கள்! ஜில்லுன்னு ஒரு குடும்ப வாழ்க்கை! சனிக்கிழமை ராத்திரியானால் சூர்யாவுக்காக பார்த்து பார்த்து பணிவிடைசெய்வது, டிரயினில் சூர்யாவைப் பார்த்து காதலாகி உருகும் பெண்ணை சதாய்ப்பது, கணவனின் பழைய காதல் தெரிந்து மருகுவது என்று ஜோதிகாவிற்கு 'நடிகையர் திலகம்' பட்டமே தரலாம். கல்யாணம்! கல்யாணத்திற்கு முன்னால் ஒரு காதல்! திருமணத்திற்குப் பிறகு மனைவி கணவனிடமும் மனைவி கணவனிடமும் பிரியமாக இருப்பதெல்லாம் யதார்த்தமான விஷயங்கள்தான்! பழையக் காதல் பற்றி மனைவிக்கோ
அல்லது கணவனுக்கோ தெரியும் போது மட்டும் இந்த யதார்த்தம் எப்படியோ விடை பெற்றுப்போய் வேண்டாத குழப்பங்கள் வந்து விடும். மீண்டும் அவர்களை வாழ்க்கையில் சந்திக்க நேரும் போது அவர்கள் நல்ல நண்பிகள் அல்லதி நண்பர்கள் என்று நினைக்க முடியும் போது எதற்காக குழப்பம்? நல்ல வேளை இந்தப் படத்தில் அத்தனை நாடகத்தனமான சோகங்கள் இல்லாமல் கணவனின் டயரியில் தாலி கட்டியவுடன் பிரிந்த காதலியை நினைத்து அவளோடு ஒரு நாளாவது வாழ்ந்திருக்கக் கூடாதா என்று புலம்பியிருப்பதைப் படித்து விட்டு அந்தக் காதலியை வரவழைத்து ஒரு நாளாவது வாழ முடியவில்லையே என்று நீங்கள் எழுதியிருந்ததைப் படித்து விட்டேன். இந்த ஒரு நாள் உங்கள் இருவருக்காக! என்று தன் கணவனின் காதலுக்கு மரியாதை தரும் மனைவி.

தன்னுடன் பேசிக் கொண்டிருப்பவன் டைரியில் புலம்பி அழுத பழைய காதலன் இல்லை. குந்தவியின் கணவனாக இருக்கும் கௌதம் மட்டும் தான் எனபதை உணர்ந்துப் பிரியும் காதலி. எல்லாம் சேர்ந்து கவிதையாக்கி இருக்க வேண்டும். ஆனால் சிறுகதையாக்கியிருக்கிறார்கள். ஆனால் அழகான சிறுகதை. இறுதிக் காட்சியில் தழதழத்தக் குரலில் சூர்யா பேசுவதைக் கண்ணை மூடிக் கொண்டுக் கேட்டால் சிவகுமார் தான் பேசுகிறாரோ என்ற ஒரு திடுக்கிடல்!
இனிமேல் சூர்யா தழதழத்தக் குரலில் பேசக்கூடாது என்ற சட்டம் போடலாம். சூர்யாவின் நண்பராக வரும் சந்தானம் வரும் போதெல்லாம் கலகலப்பு! ரெஜிஸ்டர் கல்யாணம் செய்யும் முன்பு டீக்கடைக் காட்சி! அந்தக் காட்சியின் இறுக்கத்தை தளர்த்தி விடுகிறது.அடுத்த விவேக்காக முயற்சிக்கலாம். வடிவேலு வருகிறார். போகிறார்.

சித்ரா ரமேஷ்
kjramesh@pacific.net.sg

வேட்டையாடு விளையாடு

ராணியைக் கொன்றது யார் என்ற கேள்வியுடன் படம் தொடங்குகிறது. போனில் பேசிய போது நேரம் சாயங்காலம் 5.30 மணி. விரல் துண்டாக்கப்பட்டது சுமார் மாலை 6 மணியிருக்கலாம். இந்த அரை மணி நேரத்தில் பேருந்து நிலையத்திலிருந்து மாருதி வேனில், வேனுக்கு காருக்கும் என்ன வித்தியாசம் என்பதைக் கமல் கையால் அபிநயித்து விளக்க வேண்டுமா என்ன? இந்த வித்தியாசம் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம் . இருந்தாலும் வேனை இப்படி திறக்கலாம் கார் என்றால் இப்படி திறக்க வேண்டும். அந்தப் பெண்ணை எந்த வண்டியில் ஏறிப் போனாள் என்று கமல் கேட்பது ரசிக்கும்படியாகவே இருந்தது. இப்படி படம் முழுக்க இயக்குனர் கௌதமின் கைவண்ணம் நிறையவே இருக்கிறது. கடத்தப்பட்ட ராணி எங்கே சென்றிருக்க முடியும்? இந்த வழியென்றால் ஒரு பதினைந்து நிமிட இடைவெளியில் எந்த இடத்தில் குற்றம் நடந்திருக்கலாம் என்று யூகித்து ராணியின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டுவிடுகிறது. அந்தக் காட்சியிலிருந்து ரத்தம், இன்னும் ரத்தம், வன்புணர்ச்சி, வக்கிரங்கள் என்று உலகின் அத்தனைக் குற்றங்களும் படம் முழுக்கத் தொடருகின்றன.கமல் முத்தக் கமலாக இல்லாமல் ஒரே ரத்தக் கமலாக மாறிவிட்டாரா என்ன?

பாவம்! ஆனால் படத்தில் கமல் ரொம்ப ரத்தம் சிந்தவில்லை. ஒரு முத்தம் கூட யாருக்கும் கொடுக்கவில்லை. எனவே இது கமல் படமாக இல்லாமல் கௌதமின் படமாகவே இருக்கிறது. திகில் கலந்த மர்மப் படங்கள் பார்க்கும் போதெல்லாம் எங்கேயோப் பார்த்த ஆங்கிலப் படம் அல்லது தொடரை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை.
வேட்டையாடு விளையாட்டிலும் அதே உணர்வு. போதாக்குறைக்கு பாதி படத்திக்குப் மேல் கதை நியூயார்க் நகரத்தில்!கமலும் ஜோதிகாவும் தமிழில் தானே பேசிக்கொள்கிறார்கள் என்ற சந்தேகம் அவ்வப்போது வந்து விடுகிறது. ஆரோக்கியராஜும் அவர் மனைவி சித்ராவும் எப்படியோ சரியாக கொலையாளி இருக்கும் ஊருக்குப் பக்கத்து ஊருக்கு வந்து விடுகிறார்கள். கொலையாளிகளால் திட்டமிட்டப் படுகொலை செய்யப்படுவதற்கு! அதெப்படி சரியாக அதே ஊருக்கு வந்து மாட்டிகொள்கிறார்கள் என்ற கேள்வியெல்லாம் கேட்காமல் படத்தைப் பார்த்தால் படம் ஒரு நல்ல படம்தான்! படத்தின் இறுதிக்கட்டக் காட்சியில் வரும் பரபரப்போடு விடியும் விடியற்காலைப் பொழுது! இரவில் நியூயார்க் நகரம் போன்ற கால வித்தியாசங்களை அருமையாகக் காட்டிய காமிரா! பின்னணி இசையில் பின்னியிருக்கும் ஹாரிஸ்!
பாடல்கள்தான் படத்தில் ரொம்பவே உறுத்துகின்றன. பாடல்களே இந்தப் படத்திற்குத் தேவையில்லை. அப்புறம் டாப் டென், விரும்பிக் கேட்டவை இவற்றிலெல்லாம் படத்தின் பெயர் எப்படி இடம் பெறும் என்பதற்காக ரொம்ப மெனக்கெட்டுப் பாடல்கள் நுழைந்திருக்கின்றன.

கமல் அற்புதமான உள்ளுணர்வுப் பெற்ற ஒரு சிறந்த கடமைத் தவறாத போலிஸ் அதிகாரி. ராகவன் இன்ஸ்டிங்ன்ட் என்று ராகவனாக வரும் கமலே சொல்லிக் கொள்கிறார். இருந்தாலும் முதல் காட்சியிலேயே ராணியை சின்னாபின்னமாக்கி சிதைத்தவர்கள் அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் கத்தியை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்று பிணத்தை மருத்துவப்பரிசோதனை செய்த டாக்டர் சொல்லும் போதே கொலையாளி யாராக இருக்க முடியும் என்ற வட்டத்தை குறுக்கியிருக்க முடியும்.மேலும் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள் என்று சொன்னதும் semen traces என்று கேட்பார். டி என் ஏ சோதனை மூலம் தான் யார் என்று தெரிந்து விடக் கூடாது என்று அதை அழிக்க முயற்சி செய்திருக்கிறான் என்பார் டாக்டர். புத்திசாலி ராகவனுக்கு அது ஏனோ அப்போதே தோன்றவில்லை.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக வெளிப்படையாக 'நீங்க ரெண்டு பேரும் என்ன homosexuals ஆ' என்ற வசனம் வருகிறது என்று நினைக்கிறேன். இளமாறனும் அமுதனும் ஓரினப் புணர்ச்சியாளர்கள் மட்டுமில்லை. பெண்களை கற்பழித்து கொலை செய்யும் வக்கிரம் பிடித்த அதி மேதாவியான டாக்டர்கள்! அது வெறும் பழி வாங்குவதற்கு என்றுப் பார்த்தால் சிலப் பெண்களைப் பார்த்து ரசித்துக் கெடுக்கிறார்கள். இளமாறன் அமுதனின் பெண் துணை! ஆனால் மற்ற இடங்களில் தன்னை ஆணாக நிரூபித்துக் கொள்கிறான். இதில் கொஞ்சம் குழப்பி விட்டார்களோ என்று நினைக்கும் படியான காட்சிகள் அவசர அவசரமாக வந்து போகின்றன. இது மட்டுமில்லாமல் போலிஸ் ஸ்டேஷனுக்கு வரும் ஒரு அரவாணியால் வேறு சிறுமைப்படுத்தப்படுகிறார்கள். அந்த அரவாணி உண்மையாகவேத் தேடி வந்த ஜோடி ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர். படம் முழுக்க இப்படி இயற்கைக்கு மாறான உறவு கொண்டவர்களாக இருப்பது யாருடைய கற்பனை?

கமல் என்னதான் மிடுக்காக தன்னைக் காட்டிக் கொண்டாலும் முதல் ஜோடி கமலினியுடன் பாடல் காட்சியில் தோன்றும் போது கொஞ்சம் சித்தப்பா மாதிரித்தான் தெரிகிறார். இந்த மாதிரி பிரச்சனை எல்லா நடிகர்களுக்கும் ஏற்பட்டதுதான். அந்த பாலத்தை எப்படி கடக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் புத்திசாலித்தனம்! சிவாஜி, எம்ஜியார் காலத்தில் கோட்டு போட்டுக் கொண்டு தொப்பயை மறைத்தும் மறைக்காமல் தைரியமாக கையில் ஒரு நோட் புத்தகத்துடன் காலேஜ் போகிற மாதிரி நடித்து நம்மையெல்லாம் கடுப்படித்து (ஹீம் அதெல்லாம் ஒரு காலம்!) அப்புறம் அமிதாப்புக்கும் இதே பிரச்சனை! அவரும் நிறைய படங்களில் போலிஸ் ஆபிஸர் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை பெரிய அண்ணா என்றெல்லாம் நடித்து சமாளித்தார். இந்த சமாளிப்புகள் பெரிய வெற்றியாகவில்லை. இப்ப வயதான தாத்தா என்று வயதுகேற்றாற்போல் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார். ரஜனியும் கமலும் எப்படி சமாளித்தார்கள் இனிமேல் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

ஜோதிகாவைப் பற்றிச் சொல்லாவிட்டால் படத்தைப் பார்த்ததில் அர்த்தமே இல்லை. 'காக்க காக்க' படத்தில் கண்ணாலே கவிதையாய்க் காதலைச் சொட்ட விட்டக் கண்கள் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறது. கமலிடம் அவரே ஒரு முறை கேட்பார். என் கண்ணைப் பார்த்தால் ஏதாவது தெரிந்ததா என்று. உங்க திருடனைப் பிடிச்சுட்டீங்களா என்று கேட்கும் குறும்பு, இழந்த வாழ்க்கையை நினைத்துத் தனிமையில் தவிக்கும் தவிப்பு, மீண்டும் ஒரு புதிதாய் ஒரு உறவு தேவையா என்ற குழப்பம், பழைய கணவன் பேசும் போது குழந்தையைப் பற்றி ஒரு வார்த்தைக் கேட்கவில்லை என்று வெறுப்பு. ஜோதிகா! நீங்க திருமதி சரவணன் ஆகி உங்க காதலுக்கு புதிய அத்தியாயம் தொடரப் போகிறீர்கள். இந்தப் படம் உங்க நடிப்புக்கும் ஒரு புது அத்தியாயம்தான். ஹ¥ம் எங்க அதிருஷ்டம் திரிஷா, ஸ்ரேயா குலுக்கல்களோடுக் கூடிய தமிழ்ப்பட நாயகிகள் தான் போலிருக்கிறது. இயல்பான நட்புடன் ஜோதிகா கமலுடன் பழகும் போதும் கமல் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதும் அதைத் தவிர்க்க நினைக்காமல் தள்ளிப் போடும் யதார்த்தமும் இயக்குனரின் முதிர்ச்சியும் தமிழ் சினிமாவின் மாற்றங்களும் தெரிகின்றது.

கடைசியாக ஒன்று. அமுதனும் இளமாறனும் ஏதோ மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாகாவரம் பெறுவதைப் பற்றிப் பேசுவார்கள். கடைசியில் கூட அமுதன் கமலிடம் சொல்வான். எங்களை விட்டுடுங்க நாங்க மக்களுக்குச் சேவை செய்வோம். எங்களுக்குச் சாவே கிடையாது என்று சொல்வான். அமுதனிடம் ஒரு பெண்நோயாளி வருகிறார். டாக்டர் போன வாரம் நீங்கக் கொடுத்த மருந்தில் இந்த சுருக்கமெல்லாம் மறையவே இல்லையே! வேறு ஏதாவது மாத்தித் தர முடியுமா? உடனே அமுதன் வெறி வந்து இளா! இளா! எனக்கு அவளைக் கொல்லணும்! அவ என்னை இன்சல்ட் பண்ணிட்டா! கொலை பண்ணி வேற ரொம்ப நாள் ஆச்சு! உடனே இளா அமுதனைக் கட்டிப் பிடித்து வேண்டாம் அமுதா அப்ப வேண்டாம்! அவளோட தலையை ஒரு பூசணிக்காயில் கட்டி தொங்க விட நா ஏற்பாடு பண்ணின பிறகு கொல்லலாம்! ஆமா நாம ரெண்டு பேரும்தான் உலகதிலேயே சிறந்த டாக்டர்ஸ்! கில்லர்ஸ்!

நல்ல வேளை இப்படியெல்லாம் இரண்டாம் பாகம் தொடராமல் ஒரு வழியாக கழுத்தைத் திருகி கோடாரி ஏற்றிக் கமலே கொன்று விடுகிறார். என்னதான் படம் விறுவிறுப்பாக இருந்தாலும் கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் கொலைகளைப் பார்த்துவிட்டு கழுத்தின் பின் பக்கம் ரத்தம் ஏதாவது வருகிறதா என்று தொட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கமல் it is getting personal என்ற வசனம் கமல் கௌதமியுடன் மன்னிக்கவும் ஜோதிகாவுடன் பேசும் போது யோசிக்காமல் இருக்க முடியவில்லை. கயல்விழி, அமுதன், இளமாறன் என்ற பெயர்கள் மட்டும் அசல் தமிழ்ப் பெயர்களாக படத்தில் வருகின்றன.

சித்ரா ரமேஷ்
kjramesh@pacific.net.sg