குஷ்புவும் மன்னிப்பும்

குஷ்புவும் மன்னிப்பும்

குஷ்பூ குஷ்பூ என்று எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று பார்த்தால் குஷ்பூவுக்கு கோவில் கட்டிக் கும்பிட்ட அதே ஆண்குலம்தான் இப்போது பெண்களுக்கு அதிலும் முக்கியமாக தமிழ்ப் பெண்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பாய்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பெண் தன்னுடையக் கருத்தைச் சொல்லக் கூட உரிமை இல்லையா? அதிலும் நாட்டில் ஒன்றும் நடக்காத விஷயத்தைப் பற்றிச் ஒன்றும் சொல்லவில்லையே! பெண்ணின் கற்பு அவளின் கன்னித்தன்மையில் மட்டும் தான் இருக்கிறது என்ற நிலை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இருக்கப் போகிறது? கற்புக்கு அளவுகோல்கள் யாரேனும் கண்டு பிடித்து இருக்கிறார்களா?

வீட்டை விட்டு வெளியில் வந்து நின்றாலே கற்பு போய்விட்ட மாதிரி கண்டிக்கும் காலம் (ரொம்ப நாட்களுக்கு முன்பு இல்லை!) யாரவது வீட்டிற்கு வந்தால் வாசலில் வந்து நின்று வரவேற்க மாட்டார்கள். கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு "அவங்க வீட்டுல இல்லையே" என்று சொல்லியனுப்பிவிடுவார்கள். இதுவும் ரொம்ப நாட்களுக்கு முன்பு இல்லை. பெரிய பெண் ஆகி விட்டால் அவ்வளவுதான் படிப்புக்கும் முற்றுப் புள்ளி! பிறகு அந்தப் பெண்ணை வெளியிலேயே அனுப்ப மாட்டர்கள். இது கூட ரொம்ப நாட்களுக்கு முன்னால் இல்லை. இந்தக் காட்சிகள் எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். நான் இருந்தது அப்படி ஒன்றும் குக்கிராமம் இல்லை. இப்படியெல்லாம் பெண்களை பொத்தி பொத்தி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெண்பிள்ளைங்க மட்டும் படிக்கிற பள்ளிக்கூடம், கல்லூரி, விடுதி வாசலில் நின்று பெண்ணை பத்திரமாகக் விடுமுறைக்கு கூட்டிக் கொண்டுப் போகும் அப்பாக்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே நம் கண் முன்பாகவே இரண்டு தலைமுறைகளின் வாழ்க்கை முறைகள் மாறிக் கொண்டேயிருந்தது. ஆண்களை நல்ல நண்பர்களாக நினைத்து சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டு ஒரே வீட்டில் வாடகையை பகிர்ந்து கொண்டு வாழும் ஆண் பெண் நண்பர்களைப் பார்த்தாகிவிட்டது.

என் பாட்டி காலத்தில் ஆண் நண்பர்களை வீட்டுக்குக்கே கூட்டி வரமாட்டார்கள். அப்படியே சினேகிதர்களை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தாலும் வீட்டில் இருக்கும் வயதான பாட்டிதான் வரவேற்பாள். காபி, டிபனெல்லாம் பின் கட்டிலிருந்து ஆண்கள்தான் கொண்டு வருவார்கள். என் அம்மா காலத்தில் கொஞ்சம் மாறி "வாங்க காபி சாப்பிடரீங்களா?", என்று சகஜமாகக் கேட்கும் அளவிற்கு எல்லைகள் கொஞ்சம் விரிந்திருந்தது. இப்படி காலத்துக்கு காலம் எல்லாம் மாறும் போது பெண்கள் மட்டும் இன்னும் கண்ணகி காலத்திலேயே இருந்து சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா? சன் தொலைக் காட்சியில் ஒரு பெண்மணி வீராவேசமாக நாங்க கண்ணகிப் பரம்பரைப் பெண்கள்! எங்களை இப்படி அவமானப் படுத்துவது போல் குஷ்பூ பேசலாமா? என்று கேட்டார்கள். கண்ணைகி காலத்திலே தானே மாதவியும் இருந்தாள். திருமணமாகாமல் குழந்தையும் பெற்றாள்? கண்ணைகியின் கற்புக்கு மாதவியின் கற்பு ஒன்றும் குறைச்சல் இல்லைதான்!

திருமணத்துக்கு முந்தைய உறவு, திருமணத்துகுப் பிந்தைய உறவு இதெல்லாம் நடக்காமலா இருக்கிறது? எத்தனை சதவீதம் என்பதுதான் பிரச்சனையா இல்லை இப்படி நடப்பதே இல்லை என்கிறார்களா? நடக்காத விஷயத்தைச் சொல்லவில்லை. சொல்லப்பட்ட விதத்தில் எங்கோ தப்பியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆ! அப்படியெல்லாம் நடப்பதே இல்லை சும்மா தமிழ்ப் பெண்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக இப்படி சொல்லிவிட்டார்கள் என்று கூக்குரலிடும் லட்சியவாதிப் பெண்கள் ஏன் உண்மைக்குப் புறம்பாக இருக்க வேண்டும்? உண்மைக்கும் இலட்சியத்துக்கும் நிறைய இடைவெளி கிடையாதே!

சரி!பாவம் அவங்கதான் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டாச்சே! இனிமே என்ன?
இதெல்லாம் கிடக்கட்டும்! ஆட்டோகிரா·ப் படம் மாதிரி உங்க பள்ளியில் உங்களோடு படித்த இளம் பருவத்துத் தோழர், பிறகு கல்லூரியில் உங்களுக்கு காதல் கவிதை கொடுத்து பஸ்ஸில் உங்களோடு கண்ணால் பேசிய கல்லூரிக் காதலர், உண்மையான நட்பில் இணைந்து உங்களோடு சகலத்தையும் பகிர்ந்து கொண்ட உண்மை நண்பர் என்று உங்க ஆட்டோகிரா·ப்பை உங்க கணவர் கிட்டயாவது இல்லை உங்களைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் உங்க ஆண் நண்பர் கிட்ட பெண்களே! யாராவது சொல்லியிருக்கீங்களா? சொன்ன என்ன ஆகும் என்பது தெரியாதா? அரசக் குடும்பத்தில் பிறந்து கன்னிமாடத்தில் ஆண்வாடையேத் தெரியாமல் வளர்ந்து பிறகு அண்ணலும் நோக்க அண்ணியும் நோக்க கண்ணில் பட்ட முதல் ஆண்மகனையே புருஷனாக வரித்ததாகச் சொன்னால்தானே கற்புக்கு நாம் முழு உத்திரவாதம் கொடுத்து பிறகு திருமணத்திற்கு அவர்கள் உத்திரவாதம் கொடுக்க முடியும்? ஆனாலும் குஷ்பூ மேடம் தங்கர்பச்சான் விவகாரத்தில் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டு விட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தில் இப்படி பொத்தாம் பொதுவாகக் கருத்து சொல்லியிருக்க வேண்டாமோ?

பாடுபொருள் II

பாடுபொருள் II

சிறந்த திருமண இரவுப் பாடல்கள். இதில் பாதி பாட்டுக்கு மேல் வில்லங்கமான முதலிரவுப் பாடல்கள்தான்! முதலிரவே நடக்காது இல்லை பாடி முடிந்ததும் கொஞ்ச நாட்களில் பிரிந்து விடுவார்கள்.

1. கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்
படம்:இருவர் உள்ளம் பாடியவர்: டி.எம். சௌந்திரராஜன்
(சரோஜா தேவியின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் சிவாஜியின் முகத்தில் தெரியும் பதட்டம்)

2. மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையாக கையைத் தொட்டு
படம்: சாரதா பாடியவர்: டி.எம் சௌந்திரராஜன்
(பாவமாக இருக்கும். எஸ் எஸ் ஆர் ரொம்ப அனுபவித்துப் பாடுவார்..ஹ¥ம் எதுக்கும் கொடுத்து வைக்க வேண்டாமா?)


3. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?
படம்: நிச்சயதாப்பூலம்
( இது சூப்பர் பாட்டுத்தான்! ஜமுனாவைப் பாவாடைத்தாவணியில் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்)

4. துள்ளித் திரிந்த பெண் ஒன்று
படம்: காத்திருந்த கண்கள் பாடியவர்: பி.பி.சீனிவாஸ்
(காதல் மன்னன் படமாச்சே! இனிமையான முதலிரவுதான்!)

5. அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே!
படம்: பலே பாண்டியா பாடியவர்கள்: டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா,பி.பி.சீனிவாஸ்,எல்.ஜமுனாராணி
( அப்பாடா!ஒன்றுக்கு இரண்டு ஜோடி டூயட்! பாடல் முடியும் போது எம்.ஆர்.ராதா வருவது...
இன்னும் நன்றாகத்தான் இருக்கும்! அப்பாடா! இரண்டு ஜோடிகளும் ஆளுக்கு இரண்டு
பாராக்கள் பாடி எப்போது முடியும் என்று காத்திருக்கும் போது எம் ஆர் ராதா வந்து விடுவார்!)

6. கேட்டுகோடி உருமி மேளம்! படம்: பட்டிக்காடா?பட்டணமா? பாடியது: டி.எம் சௌந்திரராஜன்,எல்.ஆர் ஈஸ்வரி
(நிஜமாகவே இது முதலிரவுப் பாட்டுதானா?)

7. கண்ணென்ன கண்ணென்ன கலங்குது? பெண்ணென்ன பெண்ணென்ன பெணென்ன மயங்குது? படம்: பெரிய இடத்துப் பெண் பாடியது: டி.எம். சௌந்திரராஜன்
(இது முதலிரவுப் பாட்டேயில்லைதானே?மறுநாள் காலையில் பாடும் பாட்டையும் சேர்த்துக்கொள்ளலாமா?)

8. ஆயிரம் இரவுகள் வருவதுண்டு! ஆனால் இதுதான்..
படம்: கற்பகம் பாடியவர்: பி.சுசீலா
(இந்தப் பாட்டை விட பேயாக வந்து பாடும் பாட்டு இன்னும் நன்றாக இருக்கும்)

9. மயங்குகிறாள் ஒரு மாது! படம்:பாசமலர் பாடியவர்: பி சுசீலா
(தங்கை போட்டோ பெட் ரூமில் இருப்பதை தர்மசங்கடத்தோடு பார்த்து கவிழ்த்து வைத்து விட்டு எம் என் ராஜத்தை பார்த்துச் சிரிப்பார் சிவாஜி! அருமைத் தங்கை அண்ணனுக்காகப் பாடும் வித்தியாசமானப் பாட்டு)

10. என்னதான் ரகசியமோ இதயத்திலே நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே!
மலர்கள் நனைந்தனப் பனியாலே என் மனமும் குளிர்ந்தது இரவாலே!
படம்: இதயக்கமலம் பாடியவர்: பி. சுசீலா’

( கே.ஆர்.விஜயா நடிக்காமல் சிரித்தால் மட்டும் போதும். நடிப்பு என்ற பெயரில் அவர் காட்டும் அதீத பாவங்களும் வெட்கமும்)

12. தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து
படம்: தாமரை நெஞ்சம் பாடியவர்: பி.சுசீலா
(இந்தப் பாடல் படத்தில் இடம் பெற்றதா இல்லையா? தெரியவில்லை! கடைசி இரண்டு வரிகள் மட்டும் படத்தில் வாணிஷி பாடுவதாக வருகிறது.)

13. சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திடும் நாள் படம்:மைக்கேல் மதன காமராஜன்
பாடியவர்: கமலஹாசன், எஸ்.ஜானகி
( ஊர்வசியை நடிப்பில் ஒரு ராட்ஸஸி என்று தெரிந்து கொண்டது இந்தப் படத்தில் தான்)

14. இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி படம்: தேவர்மகன் பாடியவர்: கமலஹாசன், எஸ்.ஜானகி
(தமிழ் திரைப்படத்தில் இரவுப் பகல் பார்க்காமல் இயல்பாக இருவர் இணைந்ததைப் பார்த்தது)

15. நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்காய்
படம்:முள்ளும் மலரும் பாடியவர்: வாணி ஜெயராம்
(ரஜனியை ரசிக்க ஆரம்பித்ததே இந்த முரட்டு அண்ணனுக்குப் பிறகுதான்)

16. நாணமோ இன்னும் நாணமோ
படம்: ஆயிரத்தில் ஒருவன் பாடியவர்கள்: டி.எம்.சௌந்திரராஜன் பி.சுசீலா
(இந்தப் படத்தில் இருவருக்கும் திருமணம் ஆயிற்றா இல்லையா யார் வில்லன் போன்ற குழப்பங்களுக்கு முடிவே இல்லை! ஆனாலும் அள்ளக் அள்ளக் குறையாதப் பாடல்கள்!)

இன்னும் நிறையப் பாடல்கள் இருந்தாலும் மணிரத்தினம் பாணியில் கிழவிகள், குழந்தைகள் கும்மாளம் போட்டுப் பாடும் பாடல்களையெல்லாம் என் லிஸ்ட்டில் சேர்க்கவில்லை
இன்னும் ஏதாவது இருந்தால் எழுதவும். ரொம்பக் கருத்துள்ளப் பாடல்கள் இடம் பெற்றதால் இந்தப் பாடல் காட்சிகளைக் கண்டு களிக்கலாம்.

பாடு பொருள்

பாடு பொருள்

தமிழில் வந்துள்ள சில சிறந்த பாடல்கள் வரிசைகள் தரப் போகிறேன். இதில் மற்றவர்களும் கலந்து கொள்ளலாம். அதுவும் மிகச் சிறந்தப் பாடலாக இருக்கலாம். ஆகவே இந்த விளையாட்டில் அனைவரும் பங்கு கொள்ள அழைக்கிறேன்.

பெண்ணை வர்ணித்து வெளிவந்த மிகச் சிறந்த பாடல்கள் முதலில்! சரி ஆண்களைத்தான் முன்னிலைப் படுத்துவோம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டுத் தேடியது தான் மிச்சம்! ஆண்களை பாட்டுடைத்தலைவனாக வைத்து பாதாதி கேச வர்ணனையோடு வந்த பாடல்கள்? இன்னும் தேடிக் கொண்டேயிருக்கிறேன். நீ என் இதயத் தெய்வம், வாழவைத்த தெய்வம் , என் கற்புக்குப் பாதுகாவலன், என் வாழ்க்கையில் வீசிய வசந்தம் இப்படியெல்லாம் பெருமையாகப் பாடியிருக்கிறார்கள். தலை முதல் பாதம் வரை வர்ணனை? திரைப் படப் பாடல்கள் பெரும்பான்மையாக ஆண்களால் எழுதப்பட்டு வருவதால் அவர்களுக்குப் பாடுபொருள் பெண்களாக இருந்து வர்ணிப்பதுதான் இயல்பாக இருக்கிறது. ‘வசீகரா’ வில் கூடத் தேடிப் பார்த்தேன். தாமரையாவது ஏதாவது சொல்லியிருக்கிறார்களா என்று. நீ முயல் குட்டிப் போல் துறுதுறுவென்று அலைவது எனக்குப் பிடிக்கும். கூடவே உனக்கு இரண்டு கேரட் தருகிறேன் என்று ஏதாவது மாதவனைப் பற்றிப் பாடியிருக்கலாம். ஒரு ஆணின் அருகாமையை நினைத்துப் பாடுவதாக இருக்கிறதேத் தவிர வர்ணனையைக் காணும்.

தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது’ வரிகளில் என்னவோ கொஞ்சம் கிண்டல் இருப்பதாகப் படுகிறது. கம்பன் மன்னிக்கவும். இது கூட ‘மானல்லவோ கண்கள் தந்தது’ என்று ஆண் பாடிய பின் பாவம் இவ்வளவுச் சொன்ன பிறகு நாமும் ஏதாவது பதில் சொல்லி வைப்போம் என்றுதான் பாடியிருக்கிறார்கள்.

ஆதி சங்கரர் அருளிய சௌந்தரிய லஹரியிலிருந்து அபிராமிப் பட்டர்ப் பாடிய அபிராமி அந்தாதி, நம்ப தமிழ்த்தாயை இடையிலே மேகலை, கைகளில் வளையாபதி, காதுகளில் குண்டலகேசி, கால்களில் சிலப்பதிகாரம் என்று உச்சி முதல் பாதம் வரை பெண்ணை வர்ணிப்பது என்றால் கவிஞர்களுக்கு எத்தனைக் கற்பனைகள்.


1. வதனமே சந்திர பிம்பமே மலர்ந்த சரோஜமோ! படம்: ஹரிதாஸ்பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்

2. நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ படம்: உலகம் சுற்றும் வாலிபன் பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்

3. ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் படம்: தெய்வத்தாய்பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்

4. அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ படம்: பேசும் தெய்வம் பாடியவர்: டி.எம் சௌந்திரராஜன்

5. மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே படம்: பூவா? தலையா? பாடியவர்: டி.எம் சௌந்திரராஜன்

6. அழகில் அழகில் தேவதை படம்: ராஜபார்வை பாடியவர்: கே.ஜே. ஏசுதாஸ்

7. அதிசய ராகம் ஆனந்த ராகம் படம்: அபூர்வ ராகம் பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்

8. மாலையில் மலர்ச் சோலையில் மது வேண்டும் மலரும் நீயே பாடியவர்: பி.பி. சீனீவாஸ் படம்:அடுத்த வீட்டுப் பெண்

9. தொடுவதென்ன தென்றலோ மலர்களோ படம்: சபதம் பாடியவர்:எஸ்.பி.பாலா

10. எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ படம்: கேப்டன் மகள்பாடியவர்: எஸ்.பி. பாலா

11. அன்பே அன்பே கொல்லாதே படம்: ஜீன்ஸ் பாடியவர்:உண்ணிகிருஷ்ணன்

12. பொட்டு வைத்த முகமோ படம்: சுமதி என் சுந்தரி பாடியவர்:எஸ்.பி. பாலா

13. அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு! படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

இதில் ஒரு பாடலில் வரும் நாயகியைத் தவிர மற்ற நாயகியர் ஏதோ அந்தப் படத்தில் அந்தக் கதாநாயகன் கண்ணுக்கு அப்படி ரதியாகத் தெரிந்தார்களேத் தவிர மற்றபடி அந்தப் பாடலைக் கேட்டு விட்டு ஆஹா இந்தக் காட்சியைக் கண்டு களிக்க முயல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பி•ப்டி கேஜி தாஜ்மஹாலை மட்டும் வர்ணனைக்குப் பொருத்தமாகப் பார்க்கலாம். இதில் மேலும் சில பலப் பாடல்கள் சேர்க்கலாம். இந்த வர்ணனைப் பாடல்கள் மேலும் உங்களுக்கும் தெரிந்தால் சொல்லுங்கள். அதுக்குன்னு சும்மா ‘உன் மை விழி ஆனந்தப் பைரவிப் பாடும்’ ‘பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ போன்ற பாடல்களைச் சொல்லி வெறுப்பேத்தாதீங்க!

பிள்ளையாரும் அவ்வையாரும்

பிள்ளையாரும் அவ்வையாரும்
நேற்று நம்ப பிள்ளையாரைப் பற்றி எழுதியதும் சுண்டல் இல்லையா என்று கேட்டு ஒருவரும் தகவல் களஞ்சியமாக இருக்கிறதே அவ்வையாரில் வரும் பிள்ளையார் யார் என்று ஒருவர் கேட்டிருந்தார். இந்த பிள்ளையார் விஷயமும் அவ்வையார் விஷயமும் நிறைய சர்ச்சைகள் உருவாக்கும் விஷயமாகி விட்டது. சிறுத்தொண்டர் தான் முதலில் வினாயகர் சிலையை வாதாபியிலிருந்து கொண்டு வந்து வழிபட்டார் என்று எழுதியிருந்ததுத் தவறு. சில விஷமிகள் பரப்பும் தவறான கருத்து! மகேந்திர பல்லவன் காலத்திலேயே தொண்டங்கி விட்டது. அப்பர் தன் பதிகத்தில் பாடியிருக்கிறார் என்று ஆதாரப் பூர்வமாக பாடல்களையெல்லம் அனுப்பியிருந்தார். பாடல்களை எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம். வினாயகர் என்று வெளிப்படையாக எழுதப் படாததால்! மகேந்திரவர்மன் காலத்திற்கும் அவரது மகன் நரசிம்மப்பல்லவன் காலத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு முப்பது வருட கால வித்தியாசம் இருக்குமா? சிறுத்தொண்டர் என்று அழைக்கப்பட்ட பரஞ்சோதியார் நரசிம்ம பல்லவனின் படைத்தளபதிதானே! எனவே பல்லவர் காலத்திலிருந்து வினாயகர் வழிபாடு தொடங்கியது என்று எடுத்துக்கொள்ளலாமா?


அடுத்தது அவ்வையைப் பற்றியது! நம்ப வேற எக்கச்சக்க சினிமாவிலும் செவிவழிக்கதைகளிலும் அவ்வையைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.முதல் அவ்வை புராணக் கதைகளில் தென்படும் அவ்வை! இவர் அடிக்கடி கைலாசம் போய் சிவா சிவா என்று வாசித்திருப்பவருக்கு சிவனை ஒன்று இரண்டு மூன்று என்று வகைப் படுத்திப் பாடி முருகனுக்கும் வினாயகருக்கும் ஒரு சின்ன மாம்பழ விஷயத்தில் மனத்தாங்கல் ஏற்படுத்தியவர். நினச்சப்ப •பிளைட் பிடிச்சு கைலாயம் போய் முருகப் பெருமானுக்கு அறிவுரை கூறிய அவ்வை யார்?


இரண்டாமவர் சங்க கால அவ்வை! இவரைப் பற்றித் தெளிவாக ஒரு சித்திரம் இருக்கிறது. தன் இளமை தன்னுடைய புலமைக்குத் தடையாக இருந்ததால் முதுமைப் பருவத்தை இளவயதிலேயே வேண்டி விரும்பிப் பெற்றவர் என்றும் ஒரு கதை இருக்கிறது.இவர் தன்னுடைய கவிதைகளால் எல்லா மன்னர்களிடையேயும் செல்வாக்குப் பெற்றிருந்தார். முக்கியமாக பாரி மன்னனுக்கும் அதியமானுக்கும் ரொம்ப நெருங்கியத் தோழி! பாரி மன்னன் போரில் இறந்ததும் முழு நிலவைப் பார்த்து பாரியின் பெண்கள் இருவரும் பாடும் ‘அற்றைத் திங்கள்’ பாட்டு அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். இது சங்க இலக்கிய மரபில் அமைந்த பாடல். அப்போது அவ்வையும் அவர்களோடு இருந்தார். தன் நெருங்கிய நண்பனின் பெண்களுக்கு உதவி செய்தார். இவர் பாடல்கள் சில சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த அவ்ஔவையார்தான் பல சிறந்த எளிமையான அற நூல்கள் எழுதியுள்ளார்.


அடுத்தவர் சங்க காலத்துக்குப் பிந்தியவர். ‘பாலும் தெளிதேனும்’ பாடலை எழுதிய அவ்வை. வினாயகர் அகவல் எழுதியவர். இதைப் பற்றி சில குழப்பங்கள் உள்ளன. அவ்வை என்ற பெயரை பெண்பாற் புலவர்கள் இருவரும் வைத்திருந்தனரா? இல்லை பிற்காலத்தில் வந்த கவிதாயினி ஔவையைப் போல நன்றாகக் கவிதை எழுதியதால் அவருக்கு அவ்வை என்ற பட்டம் கொடுத்தனரா?


ஜெமினி பட நிறுவனத்தினர் எடுத்த அவ்வையார் படம் இப்படி இந்த மூன்று அவ்வையாரையும் கலந்து எடுத்தனர். அவ்வையாரைப் பற்றிய எல்லாக் கதைகளும் வரும். சுட்டப் பழம் வேண்டுமா சுடாதப் பழம் வேண்டுமா என்று முருகன் கேள்வி கேட்டு அவ்வைக்கும் தெரியாத விஷயங்கள் உண்டு என்று தெளிவுப் படுத்தி இறுதியில் கைலாசத்தில் போய் சிவதரிசனத்தில் படம் முடியும். பிறகு ஏபி நாகராஜன் எடுத்த திருவிளையாடலில் வரும் புராண அவ்வை! இதை பற்றி நான் சொல்லவே வேண்டாம். பெரியோர்களாகச் சேர்ந்து நடத்திய நாடகமல்லவா என்று குமரன் கோபித்துக் கொண்டு மலையேற பழம் நீயப்பா என்று நம்ப அவ்வையாரும் போய் புத்திமதிச் சொல்ல.. பார்வதி வந்து உன் அப்பாவுக்கு எப்போதுமே இப்படி விளையாடுவதென்றால் மிகவும் பிடிக்கும் என்று சொல்ல திருவிளையாடல் துவங்கும். இப்படி சினிமாக்களில் கேபி சுந்தராம்பாளை அவ்வையாகப் பார்த்துப் பார்த்துப் பழகி விட்ட நண்பரொருவர் “முத வாட்டி மாம்பழத்தை கைலாசத்தில் கொண்டு போய் கொடுத்து குழப்பம் பண்ணினாங்க! அப்புறம் இன்னொரு படத்தில் தன் கணவருக்கு வைத்திருந்த மாம்பழத்தை வேறு யாருக்கோ கொடுத்து அதனால் அவங்க கணவர் கோபித்துக் கொண்டுப் போகிறாரே அது என்ன கதை?”, என்று என்னிடம் கேட்க எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அவ்வையாருக்கு திருமணம் ஆன கதை எனக்குத் தெரியாதே! என்று விசாரித்துப் பார்த்ததில் அதாங்க சின்ன வயசில் லஷ்மியா இருப்பாங்க வயசான பிறகு கேபிஎஸ்ஸா ஆயிடுவாங்களே அந்தப் படம்தாங்க! என்றார். ஐயகோ! நான் என்ன சொல்வது? இப்படி கேபிஎஸ்ஸை அவ்வையாராகவே மாற்றிய வாசனை ஒரு நிமிடம் உதவிக்குக் கூப்பிட நினைத்தேன். அந்தப் படத்தின் பெயர் காரைக்காலம்மையார். ‘தகதகதகதக என்று ஆடவா’ என்று சிவ பார்வதி நடனத்தைப் பாடியிருப்பார். அப்புறம் பூம்புகாரில் கவுந்தியடிகளாக வேறு வருவார். நல்ல வேளை அந்தப் படத்தை இன்னும் அந்த நண்பர் பார்க்கவில்லை! இல்லையென்றால் சிலப்பதிகாரத்தில் கூட கோவலனுக்கும் கண்ணகிக்கும் ரொம்ப உதவி செய்தாங்களே அவ்வையார் என்று குழப்பிவிட்டுருப்பார்.


கவிஞர் இன்குலாப் அவ்வையாரைப் பற்றி ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். இதுவும் பெரும் சர்ச்சைக்குள்ளானது! ஏன்? அவ்வை தன் நண்பனான பாரியுடன் சேர்ந்து கள் அருந்துவதாக எழுதியிருப்பார். அப்புறம் பாலகுமாரன் முதிர்கன்னி என்று அவ்வையாரை கதாநாயகியாக வைத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவ்வை விறலியர் கூட்டத்தோடு சேர்ந்து பரிசில் வாழ்க்கை வாழ்ந்ததாக எழுதியிருப்பார்.எது எப்படியிருந்தாலும் நாம் ஒன்றாம் வகுப்பில் படித்த ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் தந்த அவ்வையை ஒரு கண்ணியமும்நேர்மையும் கொண்ட தமிழ் மூதாட்டியாகக் கொண்ட மனப்பிம்பம் மாறப் போவதில்லை.
பெண்கள் எதை எதையோ புரட்சிப் புதுமை என்றெல்லாம் இன்று பேசுகிறார்களே! எந்தப் புதுமைப் பெண்ணுக்கும் இல்லாத ஒரு துணிச்சல் அன்று இருந்த அவ்வைக்கும் காரைக்காலம்மையாருக்கும் இருந்தது. ஒருவர் தன் இளமையே வேண்டாமென்று முதுமைக் கோலத்தை ஏற்றுக் கொண்டார். இன்னொருவர் இறையனுபவத்தைப் பெறப் பேயுரு கொண்டு கைலாசத்திற்குச் சென்றார்.இதைப் போல பெண்களின் புற அழகை மறுத்து அக அழகை மட்டும் பெரிதாக நினைக்கும் ஆண்கள் வேண்டாம்! பெண்களே யாராவது இருக்கிறார்களா?

கம்யூட்டர் கணபதி வாழ்க!

கம்யூட்டர் கணபதி வாழ்க!

வினாயக சதுர்த்தி என்று விடுமுறை, விக்ரம் பேட்டி, வித்யாசாகர் இன்னிசை எல்லாவற்றையும் ரசித்து கூடவே மண் பிள்ளையாருக்கு தொப்புளில் காசு அமுக்கி, குடை பிடித்து கொழுக்கட்டை,வடை,அப்பம்,சுண்டல் என்று விதரணையாக சமைத்து சாப்பிட்டு வாயுத் தொல்லையால் அவதிப்படும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு வினாயகர் பற்றிச் சில தகவல்கள்! வினாயகர் முதலில் தமிழர் கடவுளே கிடையாது. ஐந்து நிலங்களுக்கும் கடவுள்களாக போற்றியது முருகன், இந்திரன், திருமால், கொற்றவை, வருணன் போன்ற கடவுள்கள்தான். சிவன், குமரன், கொற்றவை, காளி, திருமால், பிரம்மன்,இந்திரன், வருணன், கண்ணன் போன்ற கடவுள்களைப் பற்றி சங்க இலக்கியப் பாடல்களில் வருகின்றன. ஐம்பெரும் காப்பியங்களிலும் இக்கடவுள்கள் பற்றியக் குறிப்புகள் இருக்கின்றன.ஆனால் யானை முகத்தோடு உள்ள கடவுளைப் பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. பிற்காலத்தில் சங்க காலத்துக்குப் பிந்திய காலம் குறிப்பாகச் சொன்னால் பல்லவர் காலத்தில்தான் முதன் முதலில் வினாயகர் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்தார் என்று ஆதார பூர்வமாகத் தெரிகிறது. ‘வாதாபி கணபதிம்’ பாட்டு நினைவிற்கு வருகிறதா? நம்ம ‘சிவகாமியின் சபதம்’ கதையில் ஒரு படைத் தளபதி வருவாரே பரஞ்சோதி அவர்தான் சாளுக்கியர்களை வெற்றி கொண்ட பின் அவர்கள் தலைநகரமான வாதாபியிலிருந்து ஒரு வினாயகர் சிலையை கொண்டு வந்து வழிபாடு செய்தார். பின்னர் வினாயகர் தொடர்பான புராணக்கதைகளும் நம்பிக்கைகளும் தமிழகத்திலும் பரவ ஆரம்பித்தது. இந்தப் பரஞ்சோதியார்தான் பின்னர் மிகச் சிறந்த சிவத்தொண்டரில் ஒருவரான சிறுத் தொண்டர் என்று அழைக்கப்பட்டார். பெரிய புராணக் கதைகளிலும் இவர் கதை இடம் பெற்றது.

இவருக்கு ஏன் யானை முகம்? என்ற கேள்விக்குப் பலவிதக் கதைகள் உண்டு. எல்லோருக்கும் தெரிந்த கதை பார்வதி குளிக்கப் போகும் போது தன் மீது பூச வைத்திருந்த மஞ்சளால் ஒரு குழந்தையை உருவாக்கி காவலுக்கு வைத்து விட்டுப் போனாள். அப்போது சிவபெருமான் உள்ளே நுழைய முற்பட இந்தக் குழந்தை அவரோடு உள்ளே போகக் கூடாது என்று மல்லுக்கு நிற்க முன்கோபியான சிவன் ஆத்திரத்தில் தலையை சீவி விட்டார். ஆனாலும் நம்ப சிவனுக்கு இத்தனி கோபமும் அவசரமும் ஆகாது. அவசரப்பட்டு வரம் கொடுத்து மாட்டிக்கொண்டக் கதைகளும் இவரிடம் ஏராளம். அப்புறம் பார்வதி மேடம் வந்து குய்யோ முறையோ என்றுக் கதற வடக்குப் பக்கத்தில் இருந்த யானைத்தலையைப் பொருத்தி பார்வதியால் உருவான மகனுக்கு உயிர் கொடுத்தார்.இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தக் கதைதான். இந்தக் கதையில்லாமல் வேறு சில தத்துவ விளக்கங்களும் உள்ளன. இப்படி ஆர்யக் கடவுளான வினாயகர் நம் தமிழர் வாழ்வில் இடம் பெற நம் திராவிடக் கடவுளான முருகர் பற்றி வட இந்தியாவில் காளிதாஸர் எழுதிய ‘குமார சம்பவம்’ என்ற காப்பியம் மூலம் தெரிய வந்தது. ஆனாலும் நாம் விக்னேஷ்வரரை வழிப்பாட்டுகுரியவராகமுழு முதற் கடவுளாக, எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் வினாயகர் சன்னதி முதலில் வைத்துக் கொண்டாடியது போல் முருகனின் புகழ் வடநாட்டில் ஏனோ சென்று சென்று சேரவில்லை.


பிள்ளையார் என்று சொல்லும் போதே ஒரு எளிமையான வழிபாடுதான் எல்லோர் மனதிலும் தோன்றும். ஏனையக் கடவுள்கள் போல் இவரை வழிபடுவதற்கு விசேஷமான எந்த சிரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். அங்கங்கே மரத்தடியிலும், ஆற்றங்கரையிலும் அவர் பாட்டுக்கு தேமேயென்று பழைய துண்டுத் துணியிலும் சிரித்துக் கொண்டு காட்சியளிப்பார். போகிற போக்கில் ஒரு குடம் தண்ணீர் விட்டால் இவர் அபிஷேகக் கணக்குத் தீர்ந்து விடும். காட்டுப் பூவாக கிடைக்கும் எருக்கம் பூவில் மாலை. எளிதாகக் கிடைக்கும் அருகம்புல்லில் பூஜை! இந்தப் பருவத்தில் கிடைக்கும் நாவற்பழம், பிரப்பம்பழம், விளாம்பழம் போன்ற பழங்களை வைத்துப் படைத்தால் போதும். அவருக்குப் பெரிய விருந்தே கிடைத்த மாதிரி!



வினாயகரைப் பற்றி மதிப்பும் மரியாதையும் பெருகுகிற மாதிரி ஒரு அசாத்திய மனோத்ததுவக் கதையும் உண்டு. இவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று பார்வதி ஆசைப்பட்டுப் பெண் தேடினாள். இதற்கு வினாயகர் போட்ட ஒரே நிபந்தனைஅம்மா மாதிரிப் பெண் வேண்டும். கிடைத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொன்னார். அதனால் இன்னும் பெண் கிடைக்காமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அடேயப்பா! சிக்மண்ட் •பிராய்ட் இதைத்தான் சொன்னார்!எல்லா ஆண்களுக்கும் அம்மாவைப் போல் மனைவி வேண்டும் என்பது ஒரு நிறைவேறாதக் கனவாகவே இருக்கிறது. என்ன செய்து போட்டாலும் என் அம்மா மாதிரி செய்ய வராது என்று மனைவியை கடுப்படிப்பார்கள். அம்மா சமைத்தது சுமாராக இருந்தாலும் அந்தப் பருவம், அந்த அன்பு, அரவணைப்பு, முக்கியமாக நன்றாகப் பசித்துச் சண்டைப் போட்டுச் சாப்பிடுகிற பருவம் இவையெல்லாம் சேர்ந்து இளம் பருவத்துக் கனவுகள் போலவே மனதில் அம்மாவைப் பற்றியும் அவள் சமையலைப் பற்றியும் ஒரு அற்புதச்சித்திரம் எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கத்தானே செய்யும்!

பரிசு வெறும் பரிசுதான்!

பரிசு வெறும் பரிசுதான்!

சில கல்யாணங்கள் நடந்த கதையினைக் கேட்டால் அப்பாடா ஒருவழியாக கல்யாணம் நடந்து முடிந்து விட்டாதா என்று பெருமூச்சு விட வைக்கும். பெண் பார்க்கும் போதே ஒரு வித குழப்ப நிலையிலிருப்பார் மாப்பிள்ளை. தன்னுடைய அழகுக்கும் அறிவுக்கும் ஈடு கொடுப்பாளா இந்தப் பெண்! தன்னுடைய குடும்பத்துக்கு ஒத்து வருவாளா! பார்த்தால் கொஞ்சம் திமிர் பிடித்தவள் போல் இருக்கிறாளே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார். அதற்குள் இரு குடும்பத்துக்கும் இடையில் இருக்கும் ஒரு பொது நலச் சிந்தனையாளர் ‘இந்தப் பொண்ணை விட்டு விடாதே! அப்புறம் தேடினால் கூட கிடைக்காத வைரக்கல்’ என்று புளுகி மப்பிள்ளையை நம்ப வைத்து விடுவார். கல்யாணத்திற்கு பார்க்கும் சத்திரத்திலிருந்து எடுக்கும் புடவை, நகை நட்டு பதில் மரியாதை சீர் முறுக்கு லட்டு எத்தனை வைப்பது போன்றவைகளிலிருந்து கல்யாணத்தன்றே சாந்தி கல்யாணம் உண்டா என்பது வரைக்கும் இரு வீட்டாரும் உராய்வும் புகைச்சலும் இருந்து கொண்டேயிருக்கும். அப்படியென்ன பெரிய ரதியா பொண்ணு! நல்ல கருப்புத்தான்! நம்ம லலிதாவோட பொண்ணைத்தான் முதல்ல பாக்கறதாயிருந்தது! எப்படியோ இங்க வந்து மாட்டிக்கொண்டாச்சு! பேசாம ஒத்து வரல்லைன்னு கல்யாணத்தை நிறுத்தி விடலான்னு பாக்கறேன் என்று மாப்பிள்ளை வீட்டில் புலம்பிக் கொண்டிருப்பார்கள். நிச்சயதார்த்தமே நல்ல கல்லுக்குண்டாய் இருந்த பெரியப்பா திடீரென்று மண்டையைப் போட்டுவிட தள்ளிப் போய் ஏதோ ஒப்புக்கு நடந்திருக்கும். கல்யாணத்தன்று நடக்கும் கூத்தைப் பார்க்கும் போது கல்யாணம் நின்றிருந்தாலே பரவாயில்லை என்று தோன்றும். காபி வரவேயில்லை. வந்த காபியும் சூடு ஆறிப் போய் பூனை மூத்திரம் மாதிரி இருந்தது. எங்க விட்டு மனுஷாளுக்கெல்லாம் தலைவலி என்று குற்றம் சொல்ல ஆரம்பிப்பார்கள். வழக்கம் போல் ரசத்திலெ உப்பு இல்லை. ஸ்வீட் சைஸ் சின்னதாயிருக்கு! ரெண்டாம் தடவை வந்து விசாரிக்கவில்லை என்று பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அவர்கள் வாழ்வில் பொன் எழுத்தில் பொறிக்கவிருக்கும் ஒரு பொன்னான நாள் என்பதையே மறக்கடித்து விடுவார்கள். பெண்ணைப் பெற்றவரும் சளைக்காமல் தாலி கழுத்தில் ஏறுகிற வரை பணிந்து நடப்பதைப் போல் ஒரு பாவ்லாவாவது பண்ணிக் கொண்டிருப்பார். பெண் கழுத்தில் தாலி ஏறிய பிறகு இந்த பூச்சாண்டிகெல்லாம் பயப்படாமல் இனிமெ இவ உங்க வீட்டுப் பெண். இனிமே இது உங்க வீட்டுக் கல்யாணம் என்று பட்டும் படாமலும் சொல்லி விடுவார். அப்புறம் என்ன? எல்லாக் கல்யாணங்களையும் போல் இந்த கலாட்டாவெல்லாம் மறக்கடிக்கப்படுவதற்கென்றே இன்னொரு கல்யாணம் வந்து விடும். அதுவும் இன்னொரு கில்லாடி சம்பந்தியுடன்!


பெண்ணும் மாப்பிள்ளையும் எல்லாத் தம்பதியினரைப் இந்தக் கசப்பையெல்லாம் மறந்து போல தேனிலவு கொண்டாடி கோவிலுக்கெல்லாம் போய் வந்து பத்தாம் மாதம் ஒரு குழந்தைப் பெற்று சம்சார சாகரத்தில் மூழ்கி விடுவார்கள்தான்! ஆனால் வருடா வருடம் கல்யாண நாள் என்று ஒன்று வந்து மலராத கசப்பான நினைவுகள் வந்து தொல்லைக் கொடுக்கும். குழந்தைகள் வளர்ந்து கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும் கல்யாண போட்டோவைப் பார்த்து ( இப்போதெல்லாம் குழந்தைகள் அப்பா அம்மா கல்யாண போட்டோவைப் பார்த்து உங்க கல்யாணத்தப்போ நான் எங்கேயிருந்தேன்? என்னை ஏன் யாரும் போட்டோ எடுக்கலை என்ற அசட்டுக் கேள்விகள் கேட்பதேயில்லை! ஹ¥ம்!) ஏன் மம்மி நீ சிரிக்கவேயில்லை? டாடீ ஏன் இப்படி முழிச்சுண்டு நிக்கறா, நீயும் டாடியும் லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிண்டே? என்றெல்லாம் அறிவு பூர்வமாகக் கேள்விகள் கேட்கும் போது கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் “ ஆமா கல்யாணத்தன்னிக்கு எங்கே சிரிக்க விட்டா? உங்கப்பா முழிக்கலே! பயந்து போய் அப்படிப் பார்க்கிறார். லவ்வா? அப்படீன்னா? பொண்ணு பாக்க வந்த அன்னிலேந்து லவ்வுக்கும் வாழ்க்கைக்கும் எந்த அர்த்தமும் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு!” என்று கசந்து பேசும் போது கல்யாணம் என்பது வெறும் சடங்குகளுக்காகவும், யாரையோ திருப்தி படுத்த நடத்தப்படுகின்ற விஷயமாகவும் ஆகிவிடுகிறது.


சரி! இத்தனை வியாக்கியானம் எதற்கு? சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த எழுத்தாளர் விழாவில் ஒரு அங்கமாக தங்கமுனை போட்டிகள் நடை பெற்றன. அந்த பரிசளிப்பு விழாவில் நடந்த சில விஷயங்களைப் பார்த்த போது எழுந்த சோகம்தான் இது! முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும்தான் மேடையேறி பரிசு பெற முடியும் மற்ற பரிசுக்குரியவர்கள் அங்கே ஒரு கௌண்டரில் போய் அடையாள அட்டையைக் காட்டி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இது முதல் அடி! அப்புறம் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் பரிசுக்குரியவர்கள் இல்லை. கடைசி ரவுண்ட் வரைக்கும் வந்து விட்டதால் அனைவருக்கும் அழைப்பு. எனவே முடிவுகள் மேடையில் தான் அறிவிக்கப்படும். இது இரண்டாவது அடி! தமிழில் சிறுகதைக்கு முதல் பரிசு கிடையாது. அந்த அளவுக்கு உலகத் தரம் மிக்க சிறுகதைகள் வரவில்லை. எனவே முதல் பரிசு இல்லையென்பதால் யாரும் மேடைக்குப் போய் பரிசு வாங்கவில்லை. இது மூன்றாவது அடி! வந்திருப்பர்கள் அனைவருமே இராணுவ வீரர்கள் இல்லை. மென்மையான உள்ளம் கொண்ட இலக்கியவாதிகள்! முதல் பரிசு கிடைத்தால் பெருமைதான்! ஆனால் முதல் பரிசு மட்டுமே பெருமைக்குரியது என்பது எப்படி? பரிசு கிடைத்ததற்காக வாழ்த்தியவர்கள் அனைவருமே கேட்ட முதல் கேள்வி முதல் பரிசு இல்லையாமே! இது என்ன லாப லஷ்டக் கணக்குப் பார்த்து வாங்கும் அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுச்சீட்டா?


என் நண்பரொருவர் இந்த பரிசளிப்பு விழாவிற்கு வரவில்லையென்று சொல்லிவிட்டார். பின்ன எப்படிச் செல்வது? ஐந்து பேரைக் கூப்பிட்டு மூவருக்குத்தான் பரிசு என்பதை அவர்கள் அழைக்கும் போதே சொல்லிவிட்டார்கள். மூன்று பெயர்களைக் கூப்பிடும் போதும் நம்பிக்கையோடு அனைவரும் காத்திருப்போம். நம் பேரைச் சொல்லி விட்டு நம் இரண்டு பக்கங்களிலும் உட்கார்ந்திருப்பவர்கள் பேரைச் சொல்லவில்லையென்றால் அந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு நம் கையை குலுக்குவதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பக்கத்தில் இருந்த இருவருக்கும் பரிசு எனக்கு மட்டும் பரிசு இல்லையென்றாலும் என்னால் தாங்க முடியாது. என்ன முதல் பரிசு கிடைத்திருந்தால் மட்டுமே கொஞ்சம் அதிகப்படியான மகிழ்ச்சி அவ்வளவுதான் என்று யதார்த்தமாக சொல்லி விட்டுப் போனதும் தான் இன்னும் துக்கம் அதிகமாகி விட்டது. இந்தக் கோணத்தில் இரண்டு மூன்று நாட்களாக யோசித்தும்
எதற்காக அந்த பரிசளிப்பு விழாவிற்குப் போனோம்?

மனித மனமே சற்று விசித்திரமானதுதான்! தினந்தோறும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போதெல்லாம் மல்லாக்கப் படுத்திருக்கும் கரப்பான்பூச்சிப் போல் விபத்தில் சிக்கிய பேருந்துகளையும், லாரிகளையும் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் நாம் போகும் வாகனம் மட்டும் பத்திரமாக போய் விடும் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருப்போம்.ஆமாம் நூறு பஸ் போனா அதுல ஒரு பஸ் இப்படித்தான் ஆயிடும் என்ற சொல்லிக்கொள்வோம்.ஏனென்றால் பயணம் போகும் போது விபத்தைச் சந்திக்கும் வாகனங்களின் எண்ணிக்கை சிறுபான்மைதானே! ஆனால் அதே போல் லாட்டரிச்சீட்டு வாங்கும் போது பத்தாயிரம் பேரில் ஒருவருக்குத்தான் பரிசு விழும் என்பது தெரிந்தும் அந்த பத்தாயிரத்தில் ஒருவராக நாம் இருக்கக்கூடாதா என்ற நம்பிக்கையில் பரிசுச் சீட்டு வாங்குவோம்.சாதாரண வாழ்க்கையில் இதைப் போன்ற கணக்கியல் தத்துவங்கள் நிறைய உண்டு!


ரொம்ப சீரியஸாகப் போய்விட்டது. சரி! இன்றைக்கும் கடவுளைத்தான் கூப்பிடப்போகிறேன். கணவன் மனைவி இருவரும் முதல் நாளிரவு விருந்துக்குப் போய்விட்டு வந்ததிலிருந்து வயிறு சரியில்லாமல் போய்விட்டது. மறுநாள் காலையில் எழுந்ததிலிருந்தே இருவரும் மாறி மாறி டாய்லெட் பக்கமே சுற்றிக் கொண்டிருந்தனர். “ஐய்யோக் கடவுளே”, என்று கத்திக் கொண்டே வயிற்றைப் பிடித்துக் கொண்டே இருவரும் மாறி மாறி கழிவறைக்குப் போவதும் வருவதுமாக இருந்தனர். “ ஐய்யோக் கடவுளே! நீங்க இன்னும் உள்ளத்தான் இருக்கீங்களா”, என்று மனவி கதவை இடிப்பதும் “ ஐய்யோ கடவுளே கொஞ்சம் சீக்கிரம் வெளியே வரக்கூடாதா”, என்று கணவனும் கத்திக் கொண்டிருந்தான். இதையெல்லாம் கவனித்துக் கொண்டே அவர்கள் குழந்தை பள்ளிக்குக் கிளம்பியது. அன்று பள்ளியில் அவர்கள் ஆசிரியர் பாடம் நடத்தும் போது இறைவன் எங்கே இருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். உடனே நம் சமத்துக் குழந்தை கையைத் தூக்கி எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும் என்று ஆனந்தக் கூக்குரலிட்டது. எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்லியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? உங்கள் வீட்டு டாய்லெட்டில்தானே!


இறைவன் இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம் பொருள் தானே!

eppoothum pen

எப்போதும் பெண்கள்
நம் ஊடகங்கள் மூலமாக பெண்கள் சித்தரிக்கபடும் விதத்திலிருந்து ஆண்கள் மனதில் பெண்கள் பற்றிய பிம்பங்கள் உண்மையான பெண்மையின் வெளிபாடுகளாகாது. கதைகள், காப்பியங்கள், பாடல்கள், கவிதைகள், திரைப்படங்கள் தொலைகாட்சித் தொடர்கள் இப்படி எத்தனை ஊடகங்கள் இருந்தாலும் இவை அனைத்துமே கனவுலகப் பதுமைகளாக மட்டுமே பெண்களைச் சித்தரிக்கின்றன. எழுதுபவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். பெண் கவிதாயினிகள் சிலர் பெண்மையின் வலிகளை உண்மையாக வெளிப்படுத்த முயலும் போது அவர்கள் எழுத்தின் மூலம் இன்னும் அதிகமாக காயப்படுகின்றனர். தாய்மை, கற்பு, ஒழுக்கம், குடும்பத்துக் குலவிளக்கு என்று அதிகப்படியான போற்றுதல், தேவையற்ற ஆடைக்குறைப்பு, ஆபாச வசனங்கள் மூலம் அதிகப்படியான இழிவுகள் இவை இரண்டைத் தவிர இயல்பான பெண்களைக் காணவே முடிவதில்லை. தமிழ் நாட்டில் மிகப் புகழ் பெற்றப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். அநேகக் கதைகளில் வலுக்கட்டாயமாக திருமண உறவிலோ திருமணத்திற்கு முன்பே குடும்பச்சூழலால் ஒருவனால் கெடுக்கபட்டு கர்ப்பமடைந்து விடுவாள். அவனை சரியான அயோக்கியன் என்று வெறுத்து ஒதுக்குவாள். இது வரை அட பரவாயில்லையே என்று யோசிக்க வைக்கும் திருப்பம்தான்! இதற்கு மேல்தான் தொடரும் கேலிக்கூத்து!அயோக்கியன் என்று வெறுத்து ஒதுக்கப்பட்ட அந்தக் காமுகனை உற்றுப் பார்க்க பார்க்க அவளுள் மலராத பெண்மை மலரும். உயரமாக பெண்களில் பாதிப் பேருக்கு மேல் பிடித்த நிறமாக(!) ராஜகுமாரனாகக் காட்சியளிப்பான். அதுவும் நல்ல பணக்காரனாக வேறு இருந்து விடுவான். பெரிய பங்களா, கார், பணம், அந்தஸ்து எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் அவனை வெறுப்பதற்கு கதாநாயகிக்கு ஒரு காரணமும் இல்லை. ஆனாலும் வெறுப்பதைப் போல் நடிப்பாள். ஒரு நாள் உறவில் குழந்தை உருவாகி அவன் கண்ணம்மா கண்ணம்மா என்று உருகி வைர நெக்லஸ் வாங்கிக் கொடுத்து எப்பாடியோ இருவரும் இணைந்து விடுவார்கள். இணையும் போது எப்படி இருவரும் சூழ்நிலைக் கைதியாகி ஒருவரை ஒருவர் வெறுப்பதைப் போல் நடித்தார்கள் என்று கடைசி அத்தியாயத்தில் பேசிக் கொள்வார்கள். எல்லாப் பெண்களுக்கும் தாங்கள் குத்து விளக்கைப் போல் பிரகாசிக்கும் அழகிகள் என்ற தீவிரமான நம்பிக்கையும் தன்னிடம் மயங்கி வருபவனிடம் அவர்கள் எதிர்பார்க்கும் பொய்க்கற்பனைகள் இதை பயன்படுத்தி பெண்களை ஒரு அபத்த நிலைக்கு கொண்டுபோகும் பரிதாபம். மின்மினிப் பூச்சி,பளபளக்கும் நியான் பல்பு மற்றும் கலர் பல்பெல்லாம் இதே கதையில் வரும் பிரமாதமான இன்னொரு அழகிக்கு வரும் வர்ணனைகள். ஆனால் அந்தப் பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். இன்னொரு பெண்ணையே பயன்படுத்தி பெண் வாசகிகளை இன்னும் முட்டாளாக்கும் யுக்தி! ஆண்கள் அழகானப் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காததற்கு இரண்டு காரணங்கள் மட்டும் தான். முதல் காரணம் அவ்வளவு அழகானப் பெண்ணின் பக்கத்தில் போய் நிற்க முடியுமா என்ற பயம். இன்னொன்று விஷயம் வீட்டம்மா வரை போய் அமைதியான குடும்பவாழ்க்கையில் எதற்கு தேவையில்லாமல் சலசலப்பு என்ற ஜாக்கிரதை உணர்ச்சி! மற்றபடி கற்பு சமாச்சாரத்தைப் போற்றிப் பாதுகாக்கத்தான் உங்களுக்கு இணையாக வேறு ஒரு உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கிறதே! இன்னும் மற்ற பெண் எழுத்தாளர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். கஷ்டபட்டுக்கொண்டேயிருந்து கடைசியில் தன்னிடமிருந்து வேறொருத்தியின் மோகத்தினால் பிரிந்த கணவனை மன்னித்து ஏற்றுக்கொண்டு மாதர்குல மாணிக்கமாக ஒளிவிடுவாள். ஒரு தமிழ் சினிமா பார்த்து விட்டு கணவனிடம் “வேற பொம்பளைக்கிட்டப் போய் சீரழிஞ்சு கடைசிலே பெண்டாட்டிக்கிட்ட வந்து சேருகிறான்” என்று சொல்லும் மனைவியிடம் “அதுதான் அவனுக்குக் கிடைத்த தண்டனையா?” என்றுக் கேட்டக் கணவன் நினைவிற்கு வருகிறது. (இந்திரா பார்த்தசாரதிக் கதையில்)
சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த எழுத்தாளர் விழாவில் சில பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் எழுத்திலிருந்து சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிங்கப்பூர் எழுத்தாளர் ஒருவர் தன் எழுத்தைப் பற்றிப் பேசும் போது தான் மனிதர்களை வைத்துக் கதை எழுதுவதே இல்லை எப்போதும் மிருகங்களை வைத்துத்தான் கதை எழுதுவதாகச் சொன்னார். சரிதான் ஏதோ புதுமையாக இருக்க்¢றதே என்று அவர் சொன்ன கதையைக் கேட்டால் ரத்தக் கொதிப்பு எகிறி விட்டது. சொன்ன கதையின் சாராம்சம் இதுதான்! இரண்டு நாய்கள் பெரிய பங்களாவில் வளர்கிறது. இரண்டும் சகோதரிகள்! அதில் தங்கை நாய்க்கு எப்போதும் வெளியில் போக வேண்டும் கெட்டழிய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டேயிருந்தது. அக்கா நாய் அப்படியெல்லாம் போகக்கூடாது என்று புத்திமதி சொல்லும். ஆனால் தங்கச்சியோ சொன்னதைக் கேட்காமல் வெளியில் போய் கண்டபடி திரிந்து விட்டு கடைசியில் உடம்பெல்லாம் சொறி பிடித்து வீடு திரும்புகிறது. அக்கா நாயோ கற்போடு வாழ்ந்ததால் சீரும் சிறப்பாக இருந்தது. ஆகையால் பெண்கள் எப்போதும் கற்போடும் ஒழுக்கத்தோடும் வாழ வேண்டும். கெட்டழிந்தால் இப்படிப்பட்ட இன்னல்களைத்தான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி முடித்ததும் அங்கேயிருந்த பெண்கள் ஒருவர் முகத்தில் கூட ஈயாடவில்லை. யாரும் வாயேத் திறக்கவில்லை. கேள்வி கேட்ட என்னையும் அவருடன் யாரும் பேச முடியாது என்று வாயைத் தைத்து விட்டார்கள்.பாழாய்ப்போன நாய் வாழ்க்கையிலுமா கற்பு, ஒழுக்கம் போன்ற வட்டங்கள் வெளியில் சென்றால் சொறி பிடித்து வாழ்க்கையே வீணாகி விடும் போன்ற’ ரத்தக் கண்ணீர் தீர்ப்பு! பெண்களில் பாதிப் பேருக்கு மேல் நடப்பது அநியாயம் என்று தெரிந்தாலும் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கிப் போகும் மனோபாவத்தை தேவையில்லாமல் வளர்த்துக் கொள்கிறார்கள். இப்படிப் பேசியதால் நீ என்ன சாதித்தாய் என்று எதிர்க்கேள்வி! அடுத்த முறை இதைப் போன்ற ஒரு வாய்ப்பு வரும்போது அந்த எழுத்தாளர் குறைந்த பட்சம் இதைப் போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுக்கவாவது தயங்குவார் இல்லையா?
கேள்வி கேட்கும் பெண்களைப் பற்றி எப்போதுமே ஒரு எதிர்மறையான சிந்தனை! உனக்கு ஏன் இதைப் பற்றிப் பேசினால் கோபம் வருகிறது? பொதுவாக நமக்குத் தவறு என்று தோன்றும் ஒரு விஷயம், நம் மனதை நெருடும் ஒரு செயல், கண் முன்னால் நடக்கும் அவமானங்கள் இவற்றை சகித்துக் கொண்டுச் சென்றால் அவள் ரொம்ப நல்ல பெண்! பொறுமைசாலி! எதிர்த்து நின்றால் இவங்களுக்கு ஏங்க கோபம் வருது? இவங்களும் அப்படித்தானோ? சமீபத்தில் தங்கர் பச்சான் நடிகைகளைப் பற்றித் தவறாகப் பேசிப் பெரிய பிரச்சனையாகி விட்டது. உண்மையாகவே திரைப்படத்துறையில் இருப்பவரும் சரி அல்லது வெளியில் இருந்து பார்ப்பவரும் சரி தங்களுடன் நடிக்கும் நடிகை மேல் எப்படிப்பட்ட மரியாதை வைத்திருக்கிறனர் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே! தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்வார்கள். முதல் தாராமாகத் திருமணம் செய்து கொண்டால் இனிமேல் என் மனைவி நடிக்க மாட்டாள் என்று பேட்டியளிப்பார்கள். மிஞ்சிப் போய் காதல், புரட்சி ‘சேர்ந்து வாழ்தல்’ என்று பேசியவர்கள் கூட பிரிந்து விவாகரத்து வரைக்கும் போய் விட்டது. திரைப்படத்துறை ஒரு கவர்ச்சி மிக்கத்துறை. அங்கே இப்படி ஏடாகூடமாக சங்கதிகள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. மற்ற துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் இதைப் போன்ற துக்கங்கள் தொடர்கின்றன. பெண் முதலாளிகள் என்றால் இன்னும் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக ஆண்கள். எப்போதும் எடுக்கப்படும் கடைசி ஆயுதமாக பெண்ணின் நடத்தையைப் பற்றி விமர்சனங்கள்! அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படும் பத்திரிகைத் துறையிலிருந்து பாடம் சொல்லிக்கொடுக்கப்படும் ஆசிரியர் பணி வரை பெண் என்பவளை பெண்ணாக மட்டுமே ஒரு ஆண் பார்க்கிறான். ஆனால் பெண்களோ ஆண்களை சக மனிதனாக பார்க்கிறார்கள். இறுதியாக ஒரு குட்டிக் கதை! கடவுள் உலகத்தை சிருஷ்டிக்கத் தீர்மானித்து பிரமாதமாகத் திட்டம் தீட்டி ஒவ்வொரு உயிரினமாக படைக்கிறார். மீன்கள், பறவைகள், பூச்சிகள், மிருகங்கள் என்று பலவிதமான உயிரினங்கள். பலவிதமான தாவரங்கள். இவையெல்லாம் கடவுள் படைத்த படி வாழ்ந்து உண்டு இனப்பெருக்கம் செய்து மடிந்து போயின. கடவுளுக்கு கொஞ்சம் போரடித்து விட்டது. இன்னும் கொஞ்சம் உணர்ச்சிகளோடு ஒரு உயிரினத்தை உருவாக்கலாமே என்று மனிதனை உருவாக்கினார். மனிதன் மற்ற மிருகங்கள் போலவே காட்டில் திரிந்து உணவு தேடி அலைந்து எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தான். கடவுளுக்கு இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்க்க வேண்டும் என்று தோன்றி விட்டது. ஒரு பெண்ணை உருவாக்கினார். அவளை கொண்டு போய் மனிதனிடம் கொடுத்து இவளை உருவாக்கியதே உனக்காகத்தான்! இவளால் உனக்குச் கொஞ்சம் தொந்தரவுகள் இருந்தாலும் உனக்குத் துணையாக இருப்பாள் என்று சொன்னார். மனிதனும் சரிதான் ஏதோ தனக்குத் துணையாக இருப்பாள் என்று நம்பி அவளுடன் வாழ ஆரம்பித்தான். பெண் எப்போது பார்த்தாலும் தொணதொணவென்று பேசிகொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாள். இவனிடம் எனக்குத்தான் அந்த உயரமான மரங்களில் ஏற்த் தெரியாதே நீதான் ஏறி எனக்கும் சேர்த்து பறித்துக் கொண்டு வாயேன், அந்த பட்டாம் பூச்சி இறக்கைகள் போல் ஏதாவது பூவைப் பார்த்து எனக்குத் தா, என்னால் வெட்ட வெளியில் படுக்க முடியாது ஏதாவது நல்ல குகையைக் கண்டு பிடி என்று ஏதோ ஏவல்கள் சொல்லிக் கொண்டேயிருந்தாள். இவன் அவள் பக்கத்தில் போய் நின்றால் உடனே நல்ல தண்ணீரில் குளிக்கக் கூடாதா?என்பாள். கூடிக் குலாவ முயன்றால் மிருகத்தைப் போல் உன் முகமெல்லாம் ஏன் இத்தனை தாடி மீசை என்று தள்ளிவிடுவாள். மனிதனும் பெண்ணை பலவழிகளில் திருப்திபடுத்த முயன்று கடைசியில் கடவுளிடமே போய் “ கடவுளே! என்னால் இவள் தொல்லைத் தாங்க முடியவில்லை. எனக்குத் துணையே வேண்டாம். நீங்களே இவளை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவளை கடவுளிடமே திருப்பிக் கொடுத்து விட்டு வந்து விட்டான். இனிமேல் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணினான். ஆனால் எங்கேயிருக்க முடிந்தது? மரமேறி பழம் பறித்தாலும் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்தாலும் பேசிச் சிரித்த பெண் நினைவு வந்தது. இரவு நேரங்கள் கொடுமையாயின. பைத்தியகாரனைப் போல் அவளை மறக்க நினைத்து இன்னும் அதிகம் நினைத்தான். காடு, மரம், மலை, மேடு அருவி, நதி, நீர், புல் எல்லாவற்றிலும் அவள் தெரிந்தாள். திரும்பவும் கடவுளிடமே ஓடினான். “எனக்குத் தொந்தரவு, தொணதொணவென்றப் பேச்சு இவையெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் அவளில்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. அவளை என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள்’, என்று கெஞ்சினான். கடவுள் சிரித்துக் கொண்டே “இனிமேல் நீ அவளிடம்தான் கேட்கவேண்டும்”, என்றார். பெண்ணுக்கு அப்போது ஆணவம், முசுட்டுத்தனம், முன்கோபம் என்று எல்லா துர்க்குணங்களையும் கொண்டிருந்த ஆண் என்ற எண்ணம் மறந்து அப்போது பைத்தியக்காரன் போல் தன்னிடம் கெஞ்சிகொண்டிருந்த ஆணைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அவனோடுக் கிளம்பினாள்.
கதையிலிருந்து நிறைய விஷயங்கள் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ஆண்கள் கேட்டு வாங்கிய வரம் பெண்கள். பெண்ணுக்கு உரிமைத் தருகிறேன் என்று இந்தக் கடவுள் கூட அநியாயமாக அவளை இப்படி பரிதவிக்க விட்டாரே ! இவன் உனக்கு வேண்டாமம்மா! நீ சிரித்தால் கூட இவனுக்குப் பிடிப்பதில்லை. உன்னுடைய நியாயமான கோரிக்கைகளைக் கூட சந்தோஷமாக நிறைவேற்றுவதில்லை! உனக்கு இப்படிப்படத் துணை வேண்டாமென்று அந்தக் கடவுள் கூட பெண்ணை எச்சரிக்கவில்லையே!