குஷ்புவும் மன்னிப்பும்
குஷ்புவும் மன்னிப்பும்
குஷ்பூ குஷ்பூ என்று எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று பார்த்தால் குஷ்பூவுக்கு கோவில் கட்டிக் கும்பிட்ட அதே ஆண்குலம்தான் இப்போது பெண்களுக்கு அதிலும் முக்கியமாக தமிழ்ப் பெண்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பாய்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பெண் தன்னுடையக் கருத்தைச் சொல்லக் கூட உரிமை இல்லையா? அதிலும் நாட்டில் ஒன்றும் நடக்காத விஷயத்தைப் பற்றிச் ஒன்றும் சொல்லவில்லையே! பெண்ணின் கற்பு அவளின் கன்னித்தன்மையில் மட்டும் தான் இருக்கிறது என்ற நிலை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இருக்கப் போகிறது? கற்புக்கு அளவுகோல்கள் யாரேனும் கண்டு பிடித்து இருக்கிறார்களா?
வீட்டை விட்டு வெளியில் வந்து நின்றாலே கற்பு போய்விட்ட மாதிரி கண்டிக்கும் காலம் (ரொம்ப நாட்களுக்கு முன்பு இல்லை!) யாரவது வீட்டிற்கு வந்தால் வாசலில் வந்து நின்று வரவேற்க மாட்டார்கள். கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு "அவங்க வீட்டுல இல்லையே" என்று சொல்லியனுப்பிவிடுவார்கள். இதுவும் ரொம்ப நாட்களுக்கு முன்பு இல்லை. பெரிய பெண் ஆகி விட்டால் அவ்வளவுதான் படிப்புக்கும் முற்றுப் புள்ளி! பிறகு அந்தப் பெண்ணை வெளியிலேயே அனுப்ப மாட்டர்கள். இது கூட ரொம்ப நாட்களுக்கு முன்னால் இல்லை. இந்தக் காட்சிகள் எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். நான் இருந்தது அப்படி ஒன்றும் குக்கிராமம் இல்லை. இப்படியெல்லாம் பெண்களை பொத்தி பொத்தி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெண்பிள்ளைங்க மட்டும் படிக்கிற பள்ளிக்கூடம், கல்லூரி, விடுதி வாசலில் நின்று பெண்ணை பத்திரமாகக் விடுமுறைக்கு கூட்டிக் கொண்டுப் போகும் அப்பாக்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே நம் கண் முன்பாகவே இரண்டு தலைமுறைகளின் வாழ்க்கை முறைகள் மாறிக் கொண்டேயிருந்தது. ஆண்களை நல்ல நண்பர்களாக நினைத்து சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டு ஒரே வீட்டில் வாடகையை பகிர்ந்து கொண்டு வாழும் ஆண் பெண் நண்பர்களைப் பார்த்தாகிவிட்டது.
என் பாட்டி காலத்தில் ஆண் நண்பர்களை வீட்டுக்குக்கே கூட்டி வரமாட்டார்கள். அப்படியே சினேகிதர்களை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தாலும் வீட்டில் இருக்கும் வயதான பாட்டிதான் வரவேற்பாள். காபி, டிபனெல்லாம் பின் கட்டிலிருந்து ஆண்கள்தான் கொண்டு வருவார்கள். என் அம்மா காலத்தில் கொஞ்சம் மாறி "வாங்க காபி சாப்பிடரீங்களா?", என்று சகஜமாகக் கேட்கும் அளவிற்கு எல்லைகள் கொஞ்சம் விரிந்திருந்தது. இப்படி காலத்துக்கு காலம் எல்லாம் மாறும் போது பெண்கள் மட்டும் இன்னும் கண்ணகி காலத்திலேயே இருந்து சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா? சன் தொலைக் காட்சியில் ஒரு பெண்மணி வீராவேசமாக நாங்க கண்ணகிப் பரம்பரைப் பெண்கள்! எங்களை இப்படி அவமானப் படுத்துவது போல் குஷ்பூ பேசலாமா? என்று கேட்டார்கள். கண்ணைகி காலத்திலே தானே மாதவியும் இருந்தாள். திருமணமாகாமல் குழந்தையும் பெற்றாள்? கண்ணைகியின் கற்புக்கு மாதவியின் கற்பு ஒன்றும் குறைச்சல் இல்லைதான்!
திருமணத்துக்கு முந்தைய உறவு, திருமணத்துகுப் பிந்தைய உறவு இதெல்லாம் நடக்காமலா இருக்கிறது? எத்தனை சதவீதம் என்பதுதான் பிரச்சனையா இல்லை இப்படி நடப்பதே இல்லை என்கிறார்களா? நடக்காத விஷயத்தைச் சொல்லவில்லை. சொல்லப்பட்ட விதத்தில் எங்கோ தப்பியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆ! அப்படியெல்லாம் நடப்பதே இல்லை சும்மா தமிழ்ப் பெண்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக இப்படி சொல்லிவிட்டார்கள் என்று கூக்குரலிடும் லட்சியவாதிப் பெண்கள் ஏன் உண்மைக்குப் புறம்பாக இருக்க வேண்டும்? உண்மைக்கும் இலட்சியத்துக்கும் நிறைய இடைவெளி கிடையாதே!
சரி!பாவம் அவங்கதான் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டாச்சே! இனிமே என்ன?
இதெல்லாம் கிடக்கட்டும்! ஆட்டோகிரா·ப் படம் மாதிரி உங்க பள்ளியில் உங்களோடு படித்த இளம் பருவத்துத் தோழர், பிறகு கல்லூரியில் உங்களுக்கு காதல் கவிதை கொடுத்து பஸ்ஸில் உங்களோடு கண்ணால் பேசிய கல்லூரிக் காதலர், உண்மையான நட்பில் இணைந்து உங்களோடு சகலத்தையும் பகிர்ந்து கொண்ட உண்மை நண்பர் என்று உங்க ஆட்டோகிரா·ப்பை உங்க கணவர் கிட்டயாவது இல்லை உங்களைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் உங்க ஆண் நண்பர் கிட்ட பெண்களே! யாராவது சொல்லியிருக்கீங்களா? சொன்ன என்ன ஆகும் என்பது தெரியாதா? அரசக் குடும்பத்தில் பிறந்து கன்னிமாடத்தில் ஆண்வாடையேத் தெரியாமல் வளர்ந்து பிறகு அண்ணலும் நோக்க அண்ணியும் நோக்க கண்ணில் பட்ட முதல் ஆண்மகனையே புருஷனாக வரித்ததாகச் சொன்னால்தானே கற்புக்கு நாம் முழு உத்திரவாதம் கொடுத்து பிறகு திருமணத்திற்கு அவர்கள் உத்திரவாதம் கொடுக்க முடியும்? ஆனாலும் குஷ்பூ மேடம் தங்கர்பச்சான் விவகாரத்தில் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டு விட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தில் இப்படி பொத்தாம் பொதுவாகக் கருத்து சொல்லியிருக்க வேண்டாமோ?